Thursday 27 October 2022

மனிதர்களும் கொண்டாட்டமும்

மனிதனும் கொண்டாட்டமும் !

மனிதர்கள் (நான்கு கால்) விலங்குகள்  அல்ல! விலங்குகள் உடலால் வாழ்கின்றன. மனிதர்களோ முதன்மையாக மனதால்(சிந்தனையால்) வாழ்கின்றனர்.

அதாவது விலங்குகள் உடல் தேவையால் உந்தப்பட்டு அதை நிறைவு செய்யும் பொருட்டு இயங்குகின்றன. பசிக்காமல் அவை ஒரு போதும் உணவைத் தேடுவதில்லை. எறும்பு, தேனி போன்றவற்றின் உணவு சேமிப்பு மற்றும் சிலந்தி வலை பின்னுதல், பறவைகளின் கூடு கட்டல் எல்லாமும் கூட அவற்றின் அநிச்சையான உடலியக்கத்தின் ஒரு பகுதிதான்.

விலங்கினங்கள் விளையாடுவதும் கூட வயிறு நிறைந்தவுடன் ஏற்படும் குசியின் ஓர் அங்கமாகவோ அல்லது பாலியல் தூண்டலின் ஓர் அங்கமாகவோ அல்லது எதிரியுடன் சண்டையிடுதல் அல்லது வேட்டையின் முன்மாதிரியான ஒன்றாகவோ தான் அமைகின்றனவே தவிர அவை முன் கூட்டியே திட்டமிட்டு நடத்தப்படுபவையல்ல.

அவ்வாறு தான் ஆதிமனிதர்களும் வேட்டையில் போதுமான உணவு கிடைத்து  தங்கள் வயிறு நிறைந்த பிறகு கூடி, ஆடி மகிழ்ந்திருப்பர்.

வேட்டைச் சமூகமாக வாழ்ந்த ஆதிகால (குறிஞ்சித்திணை) மனிதர்களிடமும் காணப்பட்ட இதே போன்ற தன்மைகள் மனிதகுலத்தின் வளர்ச்சிப் போக்கில், மனிதர்கள் பொருள் உற்பத்தியில் ஈடுபட்டு (மருதத்திணை) உபரி அதிகரித்த பிறகு ஆட்டம் பாட்டம் விளையாட்டு எல்லாம் உடல் தேவையில் (வயிற்றில் ) இருந்து பிரிந்து மனம்(சிந்தனை) சார்ந்து இயங்க ஆரம்பித்திருக்கும்.

நவீன எந்திரக் கண்டுபிடிப்புகள் அவற்றின்  வளர்ச்சி, தொழிற்புரட்சி காலத்திற்குப் பிறகு இந்த இடைவெளி அதாவது உடலுக்கும் மனதிற்குமான இடைவெளி அல்லது மனதின் (சிந்தனையின்) ஆதிக்கத்தின் கீழ் உடல் அடிமைப்படுத்தப்படுவது அதிகரித்தது என்றே கூறவேண்டும்.

இன்றைய மனிதரின் தேவை என்பது முதன்மையாக அவர்களது உடல் சார்ந்தது அல்ல! முற்றிலும் மனம் சார்ந்த ஒன்று தான்! அவர்களது மனத்தேவைகளுக்கு ஈடு கொடுப்பற்கு ஏற்ப செயல்பட வேண்டி  உடலின் மீது வன்முறையை ஏவுகின்றனர்.

இதுவரையிலான முதலாளியத்திற்கு முந்தைய  சமூக அமைப்புகளில் (புராதனப் பொதுவுடமை, ஆண்டான் அடிமை, நிலவுடமைச் சமூகங்கள்)  இருந்து வந்த உடலின் வலிமை/ செயலாற்றல் படிப்படியாக குறைந்து வந்து (அழிந்து வந்து )உடம்பும் கையும் கால்களும் சூம்பிப் போய்விட்டன. அல்லது ஊதிப்பெருத்து விட்டன. அதே நேரம் கண் காது மூளையின் இயக்கம் மட்டும் அதிகரித்து விட்டது! (செவிக்கும் கண்களுக்கும் உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்)

வேட்டைச் சமூகத்தின் மனித உடல் அமைப்பினை  நினைவூட்டும் ஆணழகன்கள்/அழகிகள் என்போர் தொழில் முறையாக தனித்து உருவாகிவிட்டனர். அதே போல விளையாட்டு வீரர்கள் என்போரும் தனியாக உருவாகிவிட்டனர். மற்ற பெரும்பாலானவர்கள் அனைவரும் பார்வையாளர்களாக மாறிப்போய் விட்டனர்.

முதலாளித்துவத்தின் உச்சம் பொருள் உற்பத்தியில் வேலைப் பிரிவினையை அதிகப்படுத்தியது மட்டுமல்ல  மனிதர்களையும் துறைசார்ந்தவர்களாக கூறு போட்டுவிட்டது! ஒரு துறைசார்ந்த நிபுணர் அதற்கு வெளியே மற்ற விசயங்களில் பூஜ்யமாக ஆக்கப்பட்டுவிட்டார்! 

எவ்வாறு ஒரு மோட்டார் வாகனத்தின் உதிரிப்பாகங்கள் உலகின் வெவ்வேறு பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுவதன் காரணமாக அந்த நவீன எந்திர உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு  அந்த மோட்டார் வாகனம் பற்றிய முழுமையான அறிவு இல்லாது போகிறதோ அதே போலவே இன்றைய மனிதர்கள் நிலவுடமைக்கால மனிதர்களின் தொழில்நுட்ப அறிவின் முழுமைத் தன்மைக்கு மாறான ,  பெரிய எந்திரத்திரம் ஒன்றில் பொருந்திய ஓர் திருகாணியைப் போலாகிவிடுகிறானர்.

II

இவ்வாறு இயற்கையான  உடற்தேவைகளின் அடிப்படையிலான மனித இயக்கமானது மனதால், சிந்தனையால், கருத்தியலால் வழிநடத்தப்படுவதாக / கட்டப்பட்டதாக மாறிவிட்ட போது மனிதர்களைக் கட்டியுள்ள அந்த கருத்தியல் சங்கிலியின் மறு முனையானது காலம் தோறும்  ஆண்டான், நிலப்பிரபு, முதலாளி என்று கைமாறி வந்தது. 

ஆனால் தமிழ்ச்சமூக அமைப்பிலோ அச் சங்கிலியின் மறுமுனையைப் பிடித்திருந்த இரு கைகளில் ஒன்று பார்ப்பனர்களுடையதாக எப்போதும் இருந்து வந்திருக்கிறது, வருகிறது. 

இன்றைய நவீன யுகத்தில் மனித உடம்பே, ஒருபுறம் கார்ப்பரேட் முதலாளிகளின், அவர்களது இந்தியக் கையாட்களான பனியாக்களின்  சந்தையாக/ குப்பைத் தொட்டியாக மாற்றப்பட்டுவிட்டதைக் காண்கிறோம். மறுபுறம் பார்ப்பனியத்தின் ஆடுகளமாகவும் மனித உடல் மாற்றப்பட்டுள்ளதையும் காணவேண்டியுள்ளது.

ஆம் மனிதர் உடல் இயக்கம் அவர்களது சிந்தனையால் வழிநடத்தப்படும் போது அச்சிந்தனையை பார்ப்பனியமும் பனியா(கார்ப்பரேட்)க்களும் கையகப் படுத்தி வழி நடத்துகின்றனர்.  

இன்றைய மனிதர்களின் ஒவ்வொரு உடற்தேவையும் கார்ப்பரேட் கம்பெனிகளாலும் அவற்றின் உள்நாட்டு முகவர்களான பனியாக்களாலும் நிறைவு செய்யப் படுகின்றன. 

அதே போல மருதத்திணைக்காலத்தில் இங்கு வந்து புகுந்த பார்ப்பனியம் அன்று தொட்டு இன்று வரை மனித பண்பாட்டு வாழ்க்கையை வழி நடத்தி வருவதையும் காண்கிறோம்.

இந்தப் பார்ப்பனியப் பண்பாட்டு மேலாதிக்கத்தால் அடிமையாக்கப்பட்ட மனித உடலும் மனமும் அதன் தேவைகளும் பனியா(கார்ப்பரேட்) முதலாளியத்தால் நிறைவு செய்யப்படுவதன் மூலம் இங்கு பொருளாதாரச் சுரண்டல் நடைபெற்று கார்ப்பரேட், பனியாக்கள் மேலும் மேலும் வளர்கிறார்கள்.

ஆக இத்தகைய சூழலில் கொண்டாட்டம் , திருவிழாக்கள் என்பவை வெறுமனே மனித மன மகிழ்ச்சி யோடு முடிந்து போகும் ஒன்றல்ல! அவை பார்ப்பனிய பனியா நலன்களுக்கான ஊற்றுக்கண்களாகவும் உள்ளன.

திருவிழாக்களில் பார்ப்பனிய ஆதிக்கத்தைப்  புரிந்து கொள்ளும் அளவிற்கு பனியா(கார்ப்பரேட்) சுரண்டலையும் நாம் புரிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது. ஆம் இன்று பண்டிகை நாட்களில் பயன்படுத்தப் படும் பல பொருட்கள் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படுபவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

மனிதர்களின் அன்றாடத் தேவை (இதுவும் பார்ப்பனிய பனியாக்களால் கட்டமைக்கப்பட்ட மனித மனதால் தீர்மானிக்கப்படுபவைதான்) க்கான வீட்டு உபயோகப் பொருட்கள் மாத்திரமல்ல பண்பாட்டுத் தேவைக்கான பொருட்களையும் சீனக் கம்பெனிகளே தயாரித்து நமக்குத் தருகிறது என்பது உண்மையாகும்.

இந்திய அரசு நிறுவும் மாபெரும் சிலைகள் முதல் விநாயகர் சதுர்த்தி விழாவில் மக்கள் வீடுகளுக்கு வாங்கிச் செல்லும் சிறிய விநாயகர் பொம்மைகள் வரை அவை சீனத்தயாரிப்புத் தான். விபூதி, குங்குமம், ஊதுபத்தி சூடம் சாம்பிராணி முதல் ஸ்படிக, பவள, ருத்திராட்ச மாலைகள், கடவுளர் சிலைகள் , படங்கள் வரை அனைத்தையும் தயாரித்து அனுப்புகின்றனர்.

ஏற்கனவே சீனப்பட்டாசுகள் இங்கு வந்து ஆக்கிரமித்தது பற்றிய புலம்பல்கள் கேட்பதை நாம் அறிவோம். இந்தப் பட்டியல் மிக நீண்டது . ஆக பண்டிகைகள் கொண்டாட்டங்கள் என்பவை நமது மக்களின் மகிழ்ச்சி சார்ந்தவை மட்டுமல்ல. பார்ப்பன பனியா நலன் சார்ந்தவையுமாகும்.

III

இன்னொரு கோணமும் இந்தக் கொண்டாட்டங்கள் பின்னே உள்ளது! கொண்டாட்டங்கள் என்பவை அடிப்படையில் ஓர் கூட்டுச் சமூகச் செயல்பாடாகும். 

ஒரு காலத்தில் ஆதி காலத்தில் சமூக உறுப்பினர் ஒவ்வொருவரும் அதில் பங்கேற்பாளரே ஆவர். அப்போது பார்வையாளர் என்ற பிரிவினர் உணவு தேடலிலும்(வேட்டையிலும்) கிடையாது. கொண்டாட்டத்திலும் (ஆட்டம்பாட்டத்திலும்) கிடையாது.

வேலைப்பிரிவினையும் , உற்பத்தி நடவடிக்கைகளில் இருந்து சிலர் ஒதுங்கிக் கொண்டதும் அல்லது ஒதுக்கி வைக்கப்பட்டதும் அதேபோல ஆடல் பாடல் நடவடிக்கைகளில் இருந்தும் பலரை ஒதுக்கி வைத்துவிட்டு தொழில் முறைக் கலைஞர்களாகச் சிலரை இயங்க விட்டு பெரும்பான்மையோர் பார்வையாளர்களாக மட்டும் இருந்து ரசிக்கும் (ஆதி) மனிதப் பண்பாட்டுக்கு விரோதமான  நடவடிக்கை உண்மையில் மனித இயல்பின/இயற்கை மீதான வன்தாக்குதலாகும்.

நவீனம், நாகரீகத்தின் பெயரிலான இந்த வன்முறையில் இருந்து தற்காலிகமாக விடுதலை பெறும் வாய்ப்பை பண்டிகை களும், திருவிழாக் கொண்டாட்டங்களும் அனைவருக்கும் வழங்குகின்றன. மிக நீண்ட காலமாக அமுக்கப்பட்டுக் கிடக்கும் ஆதிகால வேட்கைகள் எல்லாம் பண்டிகை கூட்டத்தின் நடுவே கட்டவிழ்த்துக் கொண்டு பீறிட்டுக் கிளம்புகின்றன.

மீண்டும் ஒவ்வொரு மனிதரும் பங்கேட்பாளராகிறார்! பார்வையாளர் என்ற புனைவு உடைந்து நொருங்குகிறது. இந்தச் சுதந்திரம், விடுதலை வேட்கை தான் வறுமையையும், கடன் நெருக்கடிகளையும் மீறி பெரும்பான்மை மக்களை திருவிழாக்களின் பால் ஈர்க்கிறது.

இதனை சில எடுத்துக் காட்டுக்களின் மூலம் விளங்கிக் கொள்ளலாம். திரையரங்க இருட்டில் பார்வையாளர் கரைந்து உண்மையில் பங்கேற்பாளராக மாறும் மாயாஜாலம் நிகழ்கிறது திரைப்படத்தின் ஏதோ ஒரு கதா பாத்திரமாக மாறி 2.30 மணி நேரம் அழவும் சிரிக்கவும் கோபப்படவும் செய்கிறார். திரைத்துறையின் தேவையும் வெற்றியும் இதில் தான் அடங்கி உள்ளது.

இதேபோன்ற ஒன்றுதான் மேடைக்கச்சேரிகளின் போது பார்வையாளர்கள் சிலர்/ பலர்  எழுந்து நின்று ஆட்டம் போடுவதும்.

ஆக திருவிழா கொண்டாட்டங்கள் தேவையா? இல்லையா? என்பது அத்தனை எளிதாக முடிவு செய்து கொள்ளக்கூடிய ஒன்றல்ல! 

IV

உணவு தேடலோடும்,வேட்டையோடும், உற்பத்தியோடும் பின்னிப்பிணைந் திருந்த கொண்டாட்டங்கள் பார்ப்பனர்களின் வருகைக்குப் பிறகு கடவுளோடும், ஜாதி, மதச்சடங்குகளோடும் ஆணாதிக்கத்தோடும் படிப்படியாக இணைக்கப்பட்டு பல்வேறு புராணக் கதைகள் புனையப்பட்டு மாற்ற கூடாதவையாக நிறுவனமயப் படுத்தப் பட்டுவிட்டன.

கொண்டாட்டங்களின் பின்னிருந்த சமூக, உற்பத்தி மற்றும் உடலியல் தேவை சார்ந்த  அறிவியல்  காரணங்கள் எல்லாம் மறைந்து ஆன்மீகக் காரணம்/ தேவை  மட்டுமே மிச்சமாக உள்ளது.

எது எப்படி இருப்பினும் மனிதர்கள் விலங்குகள் அல்லவே உடலால் மட்டும் வாழ்வதற்கு!  அவர்கள் அவ்வப்போது அனுபவிக்கும் சிறு சிறு மன மகிழ்ச்சி தான் வாழ்வின் இலக்கு பற்றிய கற்பிதம் தான் அவர்களை இன்னும் உயிர்ப்போடு இயங்க வைக்கிறது. அவையும் இல்லை என்றால் அவர்கள் எப்போதோ கூட்டம் கூட்டமாக மடிந்து போயிருப்பார்கள்.

ஆகத் திருவிழாக் கொண்டாட்டங்களை நாம் முற்றிலும் வறட்டுத்தனமாக மறுதளித்து விட முடியாது.  மாறாக கடவுள் மத சமயச் சடங்குகளில் இருந்து துண்டிக்கப்பட்ட, சமூகச் செயலூக்கத்தை உசுப்புகிற தட்டி எழுப்புகிற புதிய கதைகளையும் காரணங்களையும் கொண்ட ,  சமூகம் முழுவதையும் பங்கேற்று ஆடிப்பாடி மகிழச் செய்யும் சமத்துவ திருவிழாக் கொண்டாட்டத்தை உருவாக்க வேண்டும்.

ஆனால் அது ஒன்றும் அத்தனை எளிதல்ல! அதில் இரண்டு வித சிக்கல்கள் உள்ளன. ஒன்று நாம் புதிதாக உருவாக்க முயற்சிக்கும் திருவிழாக்களையும் கொண்டாட்டங்களையும் கூட பார்ப்பனர்கள் தங்களது நலனுக்கானதாக மாற்றிக்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக ஜனவரி புத்தாண்டு அன்று நள்ளிரவில் கோவில்களைத் திறந்து வைத்து சிறப்புத் தரிசனம் காட்டி சம்பாதிக்கும் நடவடிக்கையில் இறங்கி விட்டதையும்  பார்த்துவிட்டோம்.

மற்றொன்று தீபாவளிக்குப்பதிலாக தந்தை பெரியார் பிறந்த நாளை புத்தாடை அணிந்து  இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து பெரியார் இயக்கத் தொண்டர்கள் சிலர் கொண்டாடி வருவது. இது மக்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டப் பயன் பட்டதே தவிர பொது மக்களை கொண்டாட வைப்பதாக அமையவில்லை. 

ஆக பார்ப்பனர்களால் கையகப்படுத்த முடியாத, வெகுமக்கள் அனைவரும் விரும்பிப்  பங்கெடுக்கும் விதமான கொண்டாட்டங்களை, விழாக்களை நாம் புதிதாக உருவாக்க வேண்டும்.

அத்தகைய பதிலீட்டின் மூலமாகத்தான் இன்றைய பார்ப்பன பனியா நலனுக்கான கொண்டாட்டங்களில் இருந்து மக்களை விடுவிக்க முடியும். மாறாக வெறும் பகுத்தறிவுப் பிரச்சாரத்தின் மூலம் மட்டும் மக்களை திருவிழாக் கொண்டாட்டங்களில் இருந்து விடுதலை செய்ய இயலாது.

வேண்டுமானால் சிறுபான்மை எண்ணிக்கை கொண்ட பகுத்தறிவாளர்களான நாம் இந்த கொண்டாட்டங்களில் இருந்து தப்பிக்க தற்காலிகமாக எங்காவது ஓடி ஒளிந்து  கொள்ளலாம் ! 
@

Friday 21 October 2022

தமிழ்ச் சினிமா~பாகுபலி முதல் பொன்னியின் செல்வன் வரை மீண்டும் பொ(க)ற்காலம் நோக்கி!

தமிழ்ச்சினிமாவின் இயங்குதலை அதன் சமகால சமூக அரசியல் நிலவரத்துடன் இணைத்துப் புரிந்து கொள்ளவும் விளக்கவும் முயற்சிப்பது சரி என்று கருதுகிறேன்.

அவ்வாறே கடந்த காலத்தில் சுதந்திரப்போராட்ட கால சினிமா(1931-1947) திராவிட இயக்க கால சினிமா(1947-1967)நக்சல்பாரி இயக்க கால சினிமா(1967-1985) , இந்துத்துவ நிலவுடமைப் பண்பாட்டு மீட்டுருவாக்க சினிமா (1984-2005) என்று பலரும் வகைப்படுத்தி உள்ளதையும் ஆய்வு செய்துள்ளதையும் நாம் பார்க்கலாம்.

அதன் தொடர்ச்சியாகத் தான் சமகால சினிமாக்கள் பல இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கார்ப்பரேட் எதிர்ப்பு, நவீன தொழிற்துறை எதிர்ப்பு போன்றவற்றை முன் வைத்து கிராமப் புறங்களைப் போற்றிப் புகழ்ந்து திரைப்படங்களை எடுப்பதைப் பார்க்கும் போது ஜல்லிக்கட்டு போராட்டம் , மீத்தேன் எதிர்ப்புப் போராட்டம்,  மறைந்த நம்மாழ்வார்  போன்றவர்களின் தொடர் பிரச்சாரம் மற்றும் சீமானின் தாக்கம் கொண்ட உதவி இயக்குனர்கள், இயக்குனர்கள் திரைத்துறையில் கணிசமாக உள்ளனர் என்பதையும் விளங்கிக் கொள்ள முடிகிறது.

மற்றொரு புறம் இந்திய அளவில் பிற மொழிகளில் இந்துத்துவப் பின்னணியில் மன்னர்கால திரைப்படங்களை தொடர்ச்சியாக எடுத்து (பாகுபலி-ஆதிபுருஷ்) அவை வரவேற்பைப் பெறும் போது தமிழ்ச்சூழலில் அதற்கே உரிய தனித்துவமான தமிழ்(இந்து) ப்பெருமித வடிவில் மன்னர்காலத் திரைப்படங்களை  எடுக்கத் துவங்கி உள்ளனர்.

இதன் வெளிப்பாடுதான் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வெற்றிவேல் வீரவேல் என்ற அரசியல் முழக்கம் இட்டதுமாகும்.(எல்.முருகன்+சீமான் வேல் ஊர்வலத்தை நினைவில் கொள்ளவும்) .

இப்போது , தனது அரசியலை கைப்பற்றி மற்றவர்கள் (மணிரத்னம்) பொருளாதாரத்தையும் புகழையும் குவிப்பதைக் கண்ட சீமான் தானே நேரில் களமிறங்கத் திட்டமிட்டு அறிவிப்பும் செய்துவிட்டார். அதற்கு வெற்றிமாறனும் உடன்போகிறார் என்பது வெற்றிமாறனின் அகப் போராட்டம் , ஊசலாட்டம் முற்றுப் பெற்று அவரது பயணத்தின் (தமிழ் இந்து) திசை முடிவாகிவிட்டதையே இந்த அறிவிப்பு காட்டுகிறது.

இந்த டிரெண்ட் இத்திசையில் இன்னும் பலரையும் இழுத்துவிடும் . இது சீமான் போன்றவர்களின் பொருளாதாரத்தை+புகழை  மட்டுமல்ல நாம்தமிழரின் இனவாத ஜாதிய அரசியலையும் தமிழ் சமூகத்தில் வளர்க்கும் என்பதை  புரிந்து கொள்ள வேண்டும். இது ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த சங்கிலியைப் போன்றது. சமூக அரசியல் யதார்த்தம் சினிமாவில் தாக்கம் செலுத்துவதும் மீண்டும் சினிமா சமூக உளவியலை கட்டமைப்பதும் என்பது ஓர் தொடர் செயல்பாடாகும்.

இந்த வளர்ச்சி திராவிட இயக்க வெறுப்புக் கொண்ட அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்று. திராவிடத்தை ஒரு நூற்றாண்டு காலமாக அழிக்க முடியாது தோற்றுப்போன பார்ப்பனியம் தமிழையும் தமிழ்தேசியத்தையும்  கையில் ஏந்தி திராவிடத்தை தோற்கடிக்க முயற்சித்து தோற்றுப் போனதும் (மா.பொ.சி, ஆதித்தனார்) கடந்தகால வரலாறு ஆகும்.

இப்போது புதிய முயற்சியாக தூய தமிழ் ஜாதிப்பெருமிதத்தையும் அழிந்து கொண்டிருக்கும் நிலவுடமைப் பண்பாட்டையும் கலந்து தமிழ்(இந்து) தேசியமாக முன்வைத்து அதற்குத் துணையாக தமிழர் பாரம்பரியம் , தமிழர் பண்பாடு, தமிழர் கலை, தமிழர் இசை, தமிழர் விளையாட்டு, தமிழர் வழிபாடு,  தமிழர் வீரம் என்று கட்டமைக்கின்றனர். இந்தக் கட்டமைப்புக்குள் பார்ப்பனர் உள்ளிட்ட பல்வேறு ஜாதிகளையும் அவர்களது பெருமிதங்களையும் இணைக்கின்றனர்.

அதே நேரம் குறிப்பிட்ட சில சிறுபான்மைச் ஜாதிகளையும் இசுலாமியர்களையும் கிறிஸ்தவர்களையும்  மட்டும் தனியே பிரித்து தமிழ் தேசியத்தின் எதிரிகளாக நிறுத்துகின்றனர். இது திராவிடம் கட்டமைத்த மனிதப்பற்று மிக்க சனநாயக பகுஜன் (inclusive policy) அரசியலுக்கு நேர் எதிரான வெறுப்பு அரசியலாகும். வன்முறையும் கலவரமும்  ரத்தவெறியும் இதன் அடிநாதமாகும். 

பாகுபலி துவங்கி பொ.செ வரை இந்த மனித  ரத்தம் பீச்சியடிப்பதை ரசனைக்குரிய ஒன்றாக கிளர்ச்சியூட்டும் ஒன்றாக காட்சி ஆக்குவதை நாம் பார்க்க முடியும். இதுவே வன்முறையற்ற வழியில் சமத்துவம் படைக்கும்  திராவிட இயக்க அரசியலுக்கும் தமிழ் (இந்து) இன அரசியலுக்கும் இடையில் உள்ள வேறுபாடாகும்!

நடுநிலையும் பார்ப்பனர்களும்!

நடுநிலையும் பார்ப்பனர்களும்!

ஒருகாலத்தில் மணிமேகலைப் பிரசுரம் தமிழ்வாணன் அவர்கள் Master of all subject என்று தன்னைச் சொல்லிக் கொண்டு அனைத்துத் துறை சார்ந்த புத்தகங்களையும் எழுதி வெளியிட்டு வந்தார்.

ஒல்லியாக இருக்கும் நீங்கள் குண்டாக வேண்டுமா? அல்லது குண்டாக இருக்கும் நீங்கள் ஒல்லியாக வேண்டுமா? என்பது போன்ற தலைப்புகளில் எல்லாம் புத்தகங்களை வெளியிட்டதாக நினைவு.

அந்த மணிமேகலைப் பிரசுரத்தின் இடத்தினை கிழக்குப்பதிப்பகம் கைப்பற்றி உலகத்தில் உள்ள அனைத்து அரசியல் இயக்கங்கள், தலைவர்கள் பற்றி எல்லாம் கூட புத்தகங்களை வெளியிட்டதுடன் அவற்றை மளிகைக் கடைகளுக்கும் சப்ளை செய்து மசாலாப் பாக்கெட்டுகளுக்கு நடுவே தொங்கவிட்டது.

இந்தப் புத்தகங்களைப் படித்துவிட்டு உலக அரசியலைப் பற்றி பேசும் வல்லுனர்களும் உருவானார்கள். கிழக்குப்பதிப்பகத்தில் நம்மவர்கள்பலரும் சிறந்த சில புத்தகங்களை வெளியிடவும் செய்ததுடன் பத்ரி மிக நேர்மையான ஆள் மற்றவர்களைப் போல் இல்லாமல் ராயல்ட்டியை சரியாக கணக்கிட்டு கொடுத்து விடுவார் , எதைப்பற்றி  எழுதிக் கொடுத்தாலும் அவர் அப்படியே வெளியிடுவார் என்றனர். (மகாபாரதத்தை, சங்கரமடத்தைப் பற்றிய விமர்சனப் புத்தகங்களை அவர் வெளியிட்டுள்ளாரா என்று தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள்)

இந்த நடுநிலை, நேர்மை என்ற இரண்டு விசயங்களில் தான் நம்மாட்கள் மயங்கிப் போய் கிடக்கின்றனர். தினமணி, இந்து, தினமலர், ஆனந்தவிகடன், துக்ளக், காலச்சுவடு எல்லாம்  அனைவருக்கும் பொதுவான நடுநிலைப் பத்திரிக்கைகள். ஆனால் முரசொலியும் விடுதலையும் ஒருபக்கச் சார்பான பத்திரிக்கைகள் என்று நம்பியே பார்ப்பனரல்லாத முட்டாள்கள் ஏமாந்து போனார்கள்.

அந்த விதமான கற்பிதங்களில் ஒன்றுதான் கிழக்குப்பதிப்பக பத்ரி பற்றிய நடுநிலை அரசியல் பிம்பமும். இப்போது வெளிப்படையாக அறிஞர் அண்ணா பற்றி இழிசொல்லை அவர் பதிவிட்டதும் தான் நம்மவர்களுக்குச் சொரணை வருகிறது.

தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாத மக்களே பெரும்பான்மை பார்ப்பனர்கள் மிக மிக குறைவான எண்ணிக்கை கொண்டவர்கள். ஆனால் அவர்களது நிறுவனங்களும், நிர்வாகமும் , தலைமையும்,  படைப்புகளும் எல்லோருக்குமானது என்ற பொதுப்புத்தியை ஏற்படுத்தி இருப்பதில் தான் பார்ப்பனியத்தின் வெற்றி அடங்கி உள்ளது.

இவ்வாறான பொதுவான அடையாளம் கொண்ட, அனைவரும் ஏற்றுப் போற்றுகிற ஓர் (ஆனந்தவிகடன் போன்ற) பத்திரிக்கையைக் கூட  நம்மால் கடந்த நூறு ஆண்டுகளில் நடத்த இயலாமல் போனது நமது தோல்வி என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

இனியாவது நடுநிலை, பொது, நேர்மை என்ற பெயரில் பார்ப்பனர்களையும் அவர்களது படைப்புகளையும் , பத்திரிக்கைகளையும், பதிப்பகங்களையும் தூக்கிச் சும்ப்பதை விட்டொழியுங்கள்!

திராவிட இயக்க அரசியல் வெறுப்பு அரசியலா?

 


பார்ப்பனர்களது சமூக அரசியல் கண்ணோட்டம் எப்போதும் பிறர் மீதான வெறுப்பையே அடித்தளமாகக் கொண்டு இயங்குவதை நாம் அறிவோம்.


ஆனால் அந்தப் பார்ப்பனர்களை விலக்கி கட்டமைக்கப்பட்ட பார்ப்பனர் அல்லாத இயக்கத்தின் அரசியலோ அனைவரின் மீதான விருப்பு என்பதாகவே அமைந்திருந்தது வரலாற்று முரணும்  உண்மையுமாகும்.


ஆம் திராவிட இயக்கத்தின் அரசியல் எப்போதும் விருப்பு அரசியல் ஆகும். இன்று இதன் மறுபெயர் inclusive policy என்பதாகும். இதுதான் பார்ப்பனியத்திற்கும் திராவிடத்திற்கும் இடையிலான அடிப்படை வேறுபாடாகும்.


நம்மை காலங்காலமாக ஒடுக்கியவர்களையும் வெறுத்து ஒதுக்கியவர்களையும் சுரண்டியவர்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி பற்றிச் சிந்திப்பதுதான் திராவிடச் சிந்தனை முறையாகும்.


ஒருபோதும் பழிவாங்கும் அரசியலை திராவிட இயக்கம் மேற்கொண்டதில்லை என்பதும் பார்ப்பனியத்திற்கும் திராவிடத்திற்கும் இடையிலான மிக முக்கியமான வேறுபாடுகளில் ஒன்றாகும்.


அவ்வாறாயின் ஏன் பார்ப்பனர்களை விலக்கி பார்ப்பனரல்லாதார் என்ற பெயரில் இயக்கம் அமைத்தனர்? என்ற கேள்வி எழலாம். தொடர்ந்து இன்று வரை திராவிடர் கழகத்தில், திராவிட இயக்கத் தமிழர் பேரவை போன்ற அமைப்புகளில் பார்ப்பனர்களை இணைத்துக் கொள்ளாமல் ஏன் விலக்கி வைக்கின்றனர்? என்ற கேள்வியும் எழுப்பப்படலாம்.


பார்ப்பனியத்தை வீழ்த்தி ஓர் சமத்துவ சமூகத்தைப் படைப்பதற்கு, பார்ப்பனியத்தைப் படைத்தவர்களும், பார்ப்பனியத் தத்துவத்தால் நூறு சதவீதம் பயன் அடைபவர்களும் இன்றுவரை தொடர்ந்து பார்ப்பனியத்தைக் கட்டிக் காக்கப் போராடுபவர்களுமாக இருப்பவர்களான பார்ப்பனர்களை , பிறப்பால் மட்டுமல்லாமல் சிந்தனையாலும் செயலாலும் பார்ப்பனர்களாக இருப்பவர்களும் அதற்காக பெருமிதம் கொள்பவர்களுமான பார்ப்பனர்களை பார்ப்பனிய எதிர்ப்பு சமத்துவப் போராட்டத்தில் எவ்வாறு இணைத்துக் கொள்ள முடியும்? (பார்ப்பனர்களாகப் பிறந்திருந்தாலும் பார்ப்பனியத்தை எதிர்ப்பவர்களை திராவிட இயக்கம் நண்பர்களாக நடத்திவருவதற்கும் நிறைய எடுத்துக்காட்டுகள் உண்டு)


அவ்வாறு  பார்ப்பனர்களை திராவிடர் கழகத்தில் இணைத்துக் கொள்வது கட்டுச்சோற்றுக்குள் பெருச்சாளியை வைத்துக் கட்டியது போலாகாதா? என்பதால் தான் அவர்களை விலக்கி வைக்க வேண்டியுள்ளது. 


மற்றபடி பிரஞ்சுப் புரட்சியின் போது எதிர்ப் புரட்சியாளர்களான  மன்னர்களை கொன்றொழித்தைப் போன்றோ, அல்லது ரஷ்ய சோசலிசப் புரட்சியின் போது ஜார் மன்னனையும் பிறகு முதலாளிகளையும் ஒழித்துக் கட்டியது போன்றோ அல்லது சீனாவின் புதிய சனநாயகப் புரட்சிக் காலத்தில் நிலப்பிரபுக்களை அழித்தொழித்தது  போன்றோ  தமிழ்நாட்டில் ஒரு போதும் திராவிட இயக்கம் பார்ப்பனர்களை ஒரு சதவீதம் கூட நடத்தியதில்லை. 


மாறாக அவர்களது நியாயமான நலனையும் உள்ளடக்கி சிந்திக்கவும், அவர்களுக்குரிய பங்கை வழங்கவும் செய்தது தான் திராவிட இயக்க ஆட்சியின் சிறப்பாக இருந்தது. திராவிட இயக்கம் பார்ப்பனர்களின் ஏகபோகமான  அதிகாரத்தையும், ஆதிக்கத்தையும் வன்முறையற்ற வழியில்  உடைத்து அனைவருக்கும் அனைத்தும் என்ற சமத்துவக் கொள்கையை நடைமுறைப் படுத்தியது.


இந்த அனைவருக்கும் அனைத்தும் என்ற சமத்துவ , சமூகநீதிக் கொள்கையை எதிர்த்து வழக்குத் தொடுப்பவர்களாகவும் , போராடுபவர்களாகவும், அவதூறு, வெறுப்புப் பிரச்சாரம் செய்பவர்களாகவும் இன்றளவும் பார்ப்பனர்களே உள்ளனர் என்பதை சமகால வரலாறு பதிவு செய்துள்ளது.


இவ்வாறு பிற (பார்ப்பனரல்லாத) ஜாதியினருக்கு (கல்வி,வேலை, அர்ச்சகராகும் உரிமை போன்ற) எதையும் பங்கிட்டுத் தரக் கூடாது என்று வெளிப்படையாக பேசுபவர்களாகவும் அவர்களுக்கு அதற்கான தகுதி இல்லை என்று ஆணவமாகப் பேசக் கூடியவர்களாகவும் பார்ப்பனர்கள் இருப்பதையும் நாம் பார்க்கிறோம்.


இவ்வாறு தங்களைத்தவிர இந்நாட்டில் உள்ள பெரும்பான்மை உழைக்கும் மக்களை முட்டாள்களாகவும் , இழிபிறவிகளாகவும் இன்றளவும் கருதவும் அறிவிக்கவும் செய்யும் பார்ப்பனர்கள் முன்வைக்கும் (சனாதன) அரசியலே மனிதகுல வெறுப்பு அரசியலாகும்.


மாறாக காலமெல்லாம் தம் மீது நஞ்சைக்கக்கி வரும் பார்ப்பனர்களது நலனையும் மறுக்காமல் அதேசமயம் பெரும்பான்மை பார்ப்பனரல்லாத மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாடுபடும் திராவிட இயக்கம்  முன்வைக்கும் அரசியல் மக்கள் விருப்பு அரசியலாகும்!